ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசாங்கத்தால் கொவிட் பரவலை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசாங்கத்தால் கொவிட் பரவலை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் - ரஞ்சித் மத்தும பண்டார

(நா.தனுஜா)

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரையில் அத்தியாவசிய தேவையுடைய மக்களுக்கு ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பிரதான் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொவிட் பரவலை அரசாங்கத்தால் உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் நாட்டு மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பயணத்தடை காரணமாக நாளாந்த வருமானம் பெறும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாளாந்த கூலித்தொழில் செய்பவர்கள், நாளாந்தம் சுயதொழில் புரிபவர்கள், தனியார் துறையில் தொழில் புரிபவர்களில் தற்காலிகமாக தொழில் இழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ப அங்கத்தவர்களும் தமது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர். பயணத்தடை காரணமாக தமது உறவினர்கள் நண்பர்களின் உதவிகளையும்கூட பெறமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

கொவிட்-19 முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது அரசாங்கம் உரிய பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இந்த மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதற்காக எவ்வித திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். 

தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கும் மக்களை வாழ வைப்பதற்கும் அரசாங்கத்தால் முடியாதுள்ளது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவர்கூட இன்று நாட்டில் இல்லை.

அசாதாரண காலநிலையாலும் இப்போது மக்கள் பல்வேறு இன்னல்களை முகம் கொடுத்த வன்னமுள்ளனர். இவ்விடயம் குறித்து பொறுப்புள்ள அமைச்சர் யார் என்பதில் கூட சிக்கல்கள் எழுந்துள்ளன.

புலமைத்துவ அரசாங்கம் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் புலமைத்துவமற்ற அரசாங்கமாக என்பது இப்போது தெளிவாகியுள்ளது. சுகாதாரத் துறையினரை ஒன்றுகூட்டுவதாகக் கூறிய அரசாங்கம் மூட நம்பிக்கையாளர்களை ஒன்றுகூட்டியது.

அரசாங்கம் துரிதமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுந்தரப்பு அரசாங்கத்தின் அமைச்சர்கள் தம்மிடம் போதியளவு நிதி இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அதனைக் கொண்டு அத்தியாவசிய தேவையுடைய மக்களுக்கு ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

பயணத்தடை தொடரும் வரை இந்தத் தேவையுடையவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மனிதநேயமிக்க நோக்கை வசனத்தில் கூறாமல் நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment