புகையிரத தொழிற்சங்கங்களுக்கு இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கை :போக்குவரத்து சேவை நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

புகையிரத தொழிற்சங்கங்களுக்கு இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கை :போக்குவரத்து சேவை நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

இராஜதுரை ஹஷான்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு அலுவலக சேவை நேரத்தின் போது அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் புகையிரத தொழிற்சங்கங்களுக்கு எதிராக இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொவிட-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் பொது போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த கொவிட்-19 வைரஸ் தாக்கம் புத்தாண்டு காலத்திற்கு பிறகு சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினலும் பொறுப்புக்கூற வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகொள்ள சுகாதார தரப்பினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரச மற்றும் தனியார் பேருந்து சேவை மற்றும் புகையிரத சேவைகளில் பயணிகள் ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணம் செய்ய வேண்டும் என கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையில் சமூக இடை வெளியை பேணுவது தற்போது வரை சாத்தியமற்றதாக காணப்படுகிறது.

காலை மற்றும் மாலை அலுவலக சேவை நேரத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்து சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான நிலையில் பேருந்துக்குள் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாக உள்ளது. 

ஆகவே அலுவலக சேவைக்கு அரச பேருந்துகளை வழமைக்கு மாறாக அதிகரிக்கவும், காலை மற்றும் மாலை பேருந்து குறுகிய தூர பேருந்து போக்குவரத்து சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் இவ்வாறம் முதல் அமுல்படுத்தப்படும்.

ஒரு சில புகையிரத தொழிற்சங்கத்தினர் எதிர்வரும் 5 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அறிய முடிந்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காணப்படும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும். முறையற்ற வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படும் தொழிற்சங்கத்தினருக்கு எதிராக இம்முறை கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment