காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, திடீர் திருப்பமாக, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டன. பதற்றத்தை தணிப்பது குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று பாகி்ஸ்தான் மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் இம்ரான்கான் நேரலையில் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், இம்ரான்கான் கூறியதாவது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்பு காஷ்மீரில் இருந்த நிலைமையை (சிறப்பு அந்தஸ்து) மீண்டும் கொண்டு வந்தால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், காஷ்மீர் மக்களை நாங்கள் கைவிட்டதுபோல் ஆகிவிடும்.
எனவே, 2019 ஆம் ஆண்டு எடுத்த நடவடிக்கையை இந்தியா திரும்ப பெற்றுக் கொண்டால், அதனுடன் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அவர் கூறினார்.
பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினைகளை பேசிய இம்ரான்கான், ‘விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாக பாடுபட்டு வருகிறோம். இனிவரும் காலத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம்’ என்று கூறினார்.
No comments:
Post a Comment