பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் அதனை மறுத்து கருத்துக்களை வெளியிடுகிறது. இதன்மூலம் தற்போதைய அரசாங்கம் சட்டத்துறையையும், நீதித்துறையையும் எவ்வாறு மதிக்கிறது என்பது தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சர்கள் அவரால் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்று கூறுகின்றனர். இதன்மூலம் அரசாங்கம் சட்டத்துறையையும் நீதித்துறையையும் எவ்வாறு மதிக்கிறது என்பது தெளிவாகிறது.
இது இவ்வாறிருக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அரசாங்கம் ஊடகங்களில் அது தொடர்பான விளம்பரங்களை பிரசுரித்தது.
அத்தோடு சீன பாதுகாப்பு அமைச்சரும் நாட்டுக்கு வருகை தந்து இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் குறித்த சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment