சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் 5 இலட்சம் (500,000) சினோபார்ம் தடுப்பூசி இன்று (25) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் 31ஆம் திகதி 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை, சீன அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது.
குறிப்பாக இலங்கையிலுள்ள சீனர்களுக்கு அவை முதலில் வழங்கப்பட்டதுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியைத் தொடர்ந்து இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த கொவிட்-19 இற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 2 மில்லியன் டோஸ்களை, அரசாங்க மருந்தாக்க கூட்டுத்தாபனம் சீனாவிடமிருந்து கொள்வனவுக்காக கோரியுள்ளது.
குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றம் ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளின் கொள்வனவுக்கு, இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் விடுத்துள்ள ட்விற்றர் குறிப்பில், "ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்" என சீனத் தூதுவர் ச்சி சென்ஹோங் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணிக்கு பேருதவியாக அமையும் என நம்புவதாக அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment