தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போலி ஆவணங்களை காண்பித்து எதனோல் கடத்திச் சென்ற நபரொருவர் கசாகலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது, அங்குணுகொலபெலஸ்ஸ நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசித்த லொறி ஒன்று தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவினர், அந்த லொறியை கசாகலை பகுதியில் சோதனைக்குட்படுத்திய போது, குறித்த லொறியிலிருந்து 5000 லீற்றர் எதனோல் பீப்பாய்கள் 25 கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் எதனோலை கடத்திச் செல்வதற்காக பொலிஸாரிடம் காண்பித்த அனுமதிப்பத்திரங்கள் போலியானவை என்று தெரிந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். களனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய லொறியின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவினர் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக வீரவில பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த போலி ஆவணங்களை சந்தேக நபர் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment