உணவு, பானங்களில் உள்ள அளவுக்கு அதிகமான உப்பு இதய நோய், பக்கவாதம் காரணமான மரணத்தை விளைவிக்கக்கூடிய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உப்பில் உள்ள சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்த புதிய வழிகாட்டியையும் அது வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகில் சுமார் 11 மில்லியன் மரணங்கள், சரியான உணவுமுறை இல்லாததால் ஏற்படுகின்றன. அவற்றில் 3 மில்லியன் மரணங்களுக்கு அதிக அளவு சோடியம் உட்கொள்வதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பல பணக்கார நாடுகளில் மக்கள் உட்கொள்ளும் சோடியம் ரொட்டி, சீரியல், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பாலாடைக்கட்டி ஆகிய உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வருகிறது. அந்த நிலை, வருமானம் குறைந்த நாடுகளிலும் அதிகரித்து வருவதாக நிறுவனம் கூறியது.
சோடியம் குளோரைடு என்பது உப்பின் இரசாயனப் பெயராகும். சோடியம், உடலில் உள்ள தண்ணீர் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிகாரிகள், உப்பு உட்கொள்ளப்படும் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதோடு, சரியான உணவுப் பழக்கங்கள் குறித்த தகவல்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என நிறுவனம் வலியுறுத்தியது.
No comments:
Post a Comment