மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 12 பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதுடன் 32 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் 50 பொலிசார் கடமையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை அன்டிஜன் பரிசோதனையில் அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று பொலிஸ் நிலையத்தில் 34 பொலிசாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு சப் இன்பெக்டர், ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து 32 பொலிசாரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.
வவுணதீவு பொதுமக்கள் தமது பொலிஸ் சேவையை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு கிருமிநாசினிகளை தெளித்து சுத்தப்படுத்திய பின்னர் பொலிஸ் நிலையத்தை திறப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment