அரசுடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே அம்பாறை மாவட்டத்தை காப்பாற்ற முடியும். இல்லையேல் இங்கு தமிழர்கள் வாழ்ந்தமைக்கான தடயமும் இல்லாது போய்விடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்விற்கு தடையாக இருந்தவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே எனவும் சாடினார்.
அக்கரைப்பற்றிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எனது காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படக் கூடாது என்பதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மும்முரமாக செயற்பட்டனர்.
அந்த கால கட்டத்தில் நால்வராவது வாருங்கள் அந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அரசுடன் பேசுவோம் என பலமுறை அழைத்தேன் யாரும் வரவில்லை.
தற்போது கூட அரசுடன் இணைந்து நாம் பயணித்திருந்தால் பிரதேச செயலகம் மாத்திரமல்ல பலவற்றை பெற்றிருக்க முடியும். ஆனால் நாம் செய்ததெல்லாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஒன்றுமில்லாமல் போனதுதான் என்றார்.
எனது காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தினேன். ஆனால் அதனை பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை. பல அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை திருப்பி அனுப்பினர்.
இதனை நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தபோது நிதியை அம்பாறை மாவட்டத்தில் தேவைப்படும் யாருக்காவது வழங்குங்கள் என்றார். அதன்படி தேவைப்பட்டவர்களுக்கு நிதியை கொடுத்தேன் என்றார்.
வாச்சிக்குடா விஷேட நிருபர்
No comments:
Post a Comment