பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி வழக்கினை இடைநிறுத்த நீதிவான் கட்டளை - ஆஜரானார் சட்டத்தரணி சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி வழக்கினை இடைநிறுத்த நீதிவான் கட்டளை - ஆஜரானார் சட்டத்தரணி சுமந்திரன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி 3ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் எனக்கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும், பேரணி இடம்பெற்றதுடன், நீதிமன்ற தடையுத்தரவினை மீறி நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டவர்கள் எனப்பெயரிடப்பட்ட சிலர் மீறி கலந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கெதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை பொலிஸாரினால் கடந்த 05.02.2021ம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த தவணைகள் கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்றத்தடையுத்தரவினை மீறியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடார்த்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18ம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இப்பேரணிக்கு தடை விதித்த நிலையில், பேரணியில் பங்கு கொண்டு நீதிமன்றை அவமதித்தனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கெதிரான வழக்கு இன்று (30)கல்முனை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் எதிராக ஆட்சேபனை மனுவினை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.

இதனை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ச்சுனா ஒபயசேகர, மாயதுன்ன கொரய ஆகியோர் மேற்படி கட்டளையை வழங்கினர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது.

ஆகவே, கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினைத் தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர்வரும் 18ம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு, எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலைநகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும் கட்டளையிடப்பட்டது.

அத்தோடு, இந்த வழக்குத் தொடர்பில் கல்முனை நீதவான் நீநிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்கக்கூடாதெனவும் கட்டளையிடப்பட்டது.

ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை தடுக்கக்கோரி பெப்ரவரி 2ம் திகதி பின்னேரம் கல்முனை பொலிஸ் கோரியிருந்த தடையுத்தரவுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பொதுமக்களுக்கு உயிர் அல்லது சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாதவாறு பேரணி செல்பவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்ற உத்தரவு தான் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், இன்று (30) வழக்கு விசாரணை நீதிவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.எம்.றியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகள் தரப்பினர் வழக்கை மீளப்பெறுமாறு மன்றிற்கு சமர்ப்பணம் விடுத்த போது, நீதிவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா? எனக்கேட்டார்.

அதற்கு பொலிஸ் தரப்பினர் மேலிடத்து உத்தரவின் பிரகாரமே வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், எனவே அதே மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டுமெனத் தெரிவித்த நிலையில், குறித்த வழக்கு முற்றாக இடைநிறுத்த நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

இவ்விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைக்கின்ற போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்புப்பேரவை தலைவர் செ.கணேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ந்திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment