(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை தற்போதைய அரசாங்கம் நிச்சயம் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தது. ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஆணைக்குழுவிற்கு பரிந்துரைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலேயே தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. குற்ற விசாரணைப் பிரிவு, பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்டவையால் மாத்திரமே சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
எனினும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே பேராயரதும் கோரிக்கையாகும். முழு நாட்டு மக்களும் இதே கோரிக்கையையே முன்வைக்கின்றனர். இதனை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment