கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய வசதிகள் இல்லையென எண்ணி எவரும் அநாவசியமாக அச்சப்படத் தேவையில்லை. அரசாங்கம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதென கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயலகத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சை கொள்ளளவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் மேலும் வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு சொந்தமான கட்டடங்களை சிகிச்சை நிலையங்களுக்காக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் வசதிகள் தேவைப்பட்டால் உல்லாசப் பிரயாண ஹோட்டல்களையும் அதற்காக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடக நிறுவனங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் சில சிகிச்சைக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பூரண ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சில தினங்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடெங்கிலுமுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவ்வாறு சில தினங்களுக்கு நாட்டை முடக்குமாறு அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment