மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பூதவுடலுக்கு இறுதிவரை காத்திருக்காது அஞ்சலி செலுத்துங்கள் - ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பூதவுடலுக்கு இறுதிவரை காத்திருக்காது அஞ்சலி செலுத்துங்கள் - ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பூதவுடலுக்கான இறுதி அஞ்சலி திங்கட்கிழமை (05.04.2021) இடம்பெறுவதுடன் இவருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் இறுதி நேரம் வரை காத்திராது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது மன்னார் பேராலயத்தில் பொது மக்களுக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கும்போது அஞ்சலி செலுத்திக் கொள்ளும்படியும், சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டிய நிலை காணப்படுவதால் இறுதி நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மரண இறுதிச் சடங்கு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ அண்டகை ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவி்ககையில், ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று காலை (01.04.2021) இறைபதம் அடைந்ததையிட்டு நாம் ஆழ்ந்த அனுதாபத்தடன் இறை மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மன்னார் மறைமாவட்டத்தில் சுடர்விட்டு பிரகாசித்த ஒளி விளக்கு இவர். ஆனால் இப்பொழுது இவ் விளக்கு அனைந்து விட்டது. 2015 ஆம் ஆண்டு ஆயர் அவர்கள் நோய்வாய் பட்டதினதால் இவருக்கு பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த இரண்டு மாதங்களாக அவர் தொடர்ந்து நோய்க்கு உள்ளாகியிருந்தமையால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் முகமாக யாழ்ப்பாணம் திருச்சிலுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவர் இன்று வியாழக்கிழமை அமரத்துவம் அடைந்தார். இவரின் இறுதி கிரிகைகள் பின்வரும் ஒழுங்கின்படி மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் ஆலோசனைக் குழுக்களின் தீர்மானத்தக்கு அமைவாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக தற்பொழுது ஆயரின் உடல் யாழ் ஆயரின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு நாளை அதாவது வெள்ளிக் கிழமை (02.04.2021) காலை 10.30 வரை அங்கு வைக்கப்பட்டு பின் அவரின் உடல் மன்னார் மறைமாவட்டத்துக்கு எடுத்துவரப்படும்.

பவனியாக மன்னாருக்கு கொண்டுவரப்படும் ஆயரின் பூதவுடல் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயரின் சிற்றாலயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் வைக்கப்படும்.

இந்நேரத்தில் பொது மக்கள் இங்கு வந்து அவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக இறைவேண்டுதல் செய்வதுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (04.04.2021) மாலை 3 மணியளவில் மன்னார் ஆயரின் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு ஆயரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இங்கு ஞாயிற்றுக் கிழமை (04) மாலை தொடக்கம் திங்கள் கிழமை (05.04.2021) மாலை 2 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின் அன்று மாலை 3 மணியளவில் மன்னார் பேராலய வழிபாட்டு மண்டபத்தில் அனைத்து இலங்கை ஆயர்களுடன் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பேராலயத்தில் இவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கு எற்ப இவ் சடங்குகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால் கடைசிவரை காத்திராது அமரத்துவம் அடைந்துள்ள ஆயருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் நேரகாலத்துடன் அதாவது ஆயரின் சிற்றாலயத்திலோ அல்லது பேராலயத்தில் பூதவுடல் வைக்கப்படடிருக்கும் நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்துவது சாலச் சிறந்தது..

ஏனென்றால் இறுதி நேரச் சடங்கின்போது சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அதில் கலந்து கொள்வதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நிலை ஏற்படும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ, எஸ்.றொசேரியன் லெம்பேட்))

No comments:

Post a Comment