அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 93 சதவீதமான தேவையற்ற அழைப்புகள், பொலிஸாரை திசை திருப்ப முயற்சித்தால் சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 93 சதவீதமான தேவையற்ற அழைப்புகள், பொலிஸாரை திசை திருப்ப முயற்சித்தால் சட்ட நடவடிக்கை

(செ.தேன்மொழி)

நாளாந்தம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளை அறிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தவறாக பயன்படுத்தப்படுவதுடன், இந்த பிரிவுக்கு கிடைக்கப் பெறும் அழைப்புகளில் 93 சதவீதமானவை தேவையற்றதாக காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டு மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளை அறிவிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்த பிரிவுக்கு கிடைக்கப் பெறும் அழைப்புகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளன.

அதற்கமைய, 2004 ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில், 119 என்ற அவசர அழைப்பு பிரிவுக்கு 12,32,272 அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு மாத்திரம் 3,300 தொலைபேசி அழைப்புகள் இதற்கு கிடைக்கின்றன.

ஆனால் 8000 பேர் வரையில் தொடர்புகொள்ள முயற்சிப்பதுடன், அவர்களுள் 3,000 பேருக்கு மாத்திரமே தொடர்புகொள்ள முடிகின்றது. எனினும் இவ்வாறு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் அழைப்புகளில் 93 சதவீதனமானவை தேவையற்றதாகவே காணப்படுகின்றன.

அதன் காரணமாக, பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெறும் தேவையான அழைப்புகளை ஏற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பயனுள்ள சேவையையும் வழங்க முடியாமல் போயுள்ளது. 

அதனால் பாரிய குற்றச் செயற்பாடுகள், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர நிலைமையின் போது மாத்திரம் இந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நிலையில், மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், முரண்பாடுகள் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளிப்பதுடன், மின்னஞ்சல் ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும். 

இதேவேளை 119 என்ற அவசர அழைப்பு பிரிவை தொடர்பு கொண்டு பொலிஸாரை திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள கூடாது. அவ்வாறு எவறேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment