அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய கப்பல் இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைந்து துறைமுகத்திற்கு வரும் வரை அதனை யாரும் அறிந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு கப்பல் வருகை தந்து நாட்டில் குண்டு தாக்குதலை மேற்கொண்டாலும் இதே நிலைமையே காணப்படும். தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் புதன்கிழமை அணுசக்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய கப்பல் அனுமதியின்றி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
குறித்த கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் வரை அதிகாரிகள் உறங்கிக் கொண்டிருந்தார்களா?
இவ்வாறானதொரு கப்பல் துறைமுகத்திற்குள் வரும் வரை அது பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்றால், வெளிநாட்டு இராணுவம் நாட்டுக்கு வந்து சென்றாலும் இதே நிலைமையல்லவா ஏற்படும்?
அவ்வாறெனில் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த கப்பல் நாட்டுக்கு வந்து சென்றமையாகும் என்றார்.
No comments:
Post a Comment