பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துக்கள் ஏலம் விடப்படுமா? - ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துக்கள் ஏலம் விடப்படுமா? - ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவி வகித்த நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்குகளில் அந்த நாட்டின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவி வகித்தவர், நவாஸ் ஷெரீப் (வயது 71). இவர் ஊழல் வழக்குகளில் அந்த நாட்டின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு இடைக்கால பினை வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரது பினையை அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரங்கள் நீட்டித்து 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அவரது பினையும் முடிந்தது.

அதைத் தொடர்ந்து அவரை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு எதிராக அல் அஜிசியா ஊழல் வழக்கில் பினையில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், டோஷாகானா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், டோஷாகானா ஊழல் வழக்கில் முர்ரி, சாங்கலா கல்லியில் உள்ள தங்களது தந்தை நவாஸ் ஷெரீப் சொத்துகளை ஜப்தி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜப்தி செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலத்தில் விற்பதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஊழல் தடுப்பு அமைப்பின் துணைத்தலைமை சட்டத்தரணி சர்தார் முசாப்பர் கான் அப்பாசி, இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது டோஷாகானா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 6 மாதங்கள் முடிந்துள்ள போதிலும் அவர் நீதிமன்றத்தில் சரணடையவில்லை. கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் திகதி அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கு அக்டோபர் 1ம் திகதி உத்தரவு போடப்பட்டது.

சட்டப்படி நவாஸ் ஷெரீப்பின் முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப்புக்கு சொந்தமான சொத்துகள் பட்டியலையும் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

அதில் நவாஸ் ஷெரீப்புக்கு 4 பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளில் பங்குகள் உள்ளன, 3 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் உட்பட மொத்தம் 8 வங்கிக் கணக்குகள் உள்ளன. 

மேலும் லேண்ட் குரூசர் கார் ஒன்று, மெர்சிடஸ் கார்கள் 2, உழவு இயந்திரங்கள் 2 இருக்கின்றன. மேலும் லாகூர், ஷேகுபுரா, முர்ரி மற்றும் அப்போட்டாபாத் ஆகிய இடங்களிலும் சொத்துகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் சொத்துக்களை ஏலம் விட உத்தரவிடுமாறு ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ள மனு மீது அடுத்த சில நாட்களில் இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி உத்தரவு போடும். அப்போது நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment