வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் - பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் - பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஸிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப் படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412' ரக ஹெலிகொப்டர் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றது. 

ஹெலிகொப்டரில் 2 விமானிகளும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரும் இருந்தனர். இந்த ஹெலிகொப்டர் மஷோனாலேண்ட் மாகாணத்தின் ஆக்டூரஸ் நகரிலுள்ள ஹூகூரு என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் ஹெலிகொப்டர் நடுவானில் திணறியது. இதையடுத்து ஹெலிகொப்டரை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.‌ ஆனால் அவர்களின் கட்டுக்குள் வராத ஹெலிகொப்டர் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்தக் கோர விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதுமட்டுமின்றி ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கிய வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

அதேசமயம் அந்த குழந்தையின் தாயும், சகோதரியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த கோர விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment