சர்ச்சைக்குரிய வகையில் கார் ஜன்னலில் சகாக்களை ஏற்றிச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல் : மேலும் 4 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

சர்ச்சைக்குரிய வகையில் கார் ஜன்னலில் சகாக்களை ஏற்றிச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல் : மேலும் 4 பேர் கைது

(செ.தேன்மொழி)

அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஜன்னலில் சகாக்களை ஏற்றிச் சென்ற சாரதி எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் குறித்த காரில் பயணித்த அக்குரணை பகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பற்ற முறையில் கார் ஒன்று பயணிக்கும் காணொளி சமூக வலைத்தலங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இதன்போது காரில் செல்லும் பயணிகள் காரின் ஜன்னலில் அமர்ந்து செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பொலிஸ் பிரவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், இதன்போது நீதிவான் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் காரின் ஆரம்ப உரிமையாளர் மற்றும் அதை அவரிடமிருந்து, பெற்றுக் கொண்ட நபர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்போது காரின் ஜன்னலில் அமர்ந்து சென்ற அக்குரணையைச் சேர்ந்த மேலும் 4 நபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment