இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபரான கலாநிதி மஹிந்த பாலசூரிய காலமானார்.
ஒதனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29) பிற்பகல் 5.00 மணிக்கு கொழும்பு, நாராஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
1953 இல் பிறந்த அவர் மரணிக்கும் போது 68 வயதாகும். 1978 ஆம் ஆண்டு பயிற்சி உதவி பொலிஸ் பரிசோதகராக (ASP) பொலிஸ் சேவையில் இணைந்த அவர், பல்வேறு பதவிகளில் வகித்து வந்துள்ளார்.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் காலத்தில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கிற்கு பொறுப்பாக இருந்தார்.
2010-2011ஆம் ஆண்டில் இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் பிரேசில், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாட்டுக்கான தூதுவராகவும் கடமையாற்றிய அவர், 2014 இல் சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த காலப் பகுதியில், நாடு முழுவதும் 119 அவசர தொலைபேசி சேவையை மஹிந்த பாலசூரிய அறிமுகப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.
No comments:
Post a Comment