வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த 25 சந்தேகநபர்களும், 25 வாகனங்களும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை, மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வாழைச்சேனை அதிரடிப்படையினருடன் இணைந்து இரண்டு நாட்கள் விஷேட நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது உழவு இயந்திரம் பதினாறு (16), டிப்பர் வாகனம் ஏழு (07) லொறி இரண்டு (02) ஆகிய இருபத்தைந்து வாகனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் அதனுடன் இருபத்தைந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்
No comments:
Post a Comment