நைஜரில் பாடசாலையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பாடசாலை ஒன்று உள்ளது. இங்கு சில வகுப்பறைகள் பாடசாலை கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பாடசாலைக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் உன்னிப்பாக பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பாடசாலையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ பாடசாலை முழுவதும் பரவியது.
தீ வகுப்பறை வாயில் கதவை அடைத்துக் கொண்டதால் பலரும் மதில் சுவரை தாண்டி தப்பித்ததாக ஆசிரியர் சங்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ நாலாபுறமும் சூழ்ந்ததால் மாணவர்கள் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
தீ ஏற்பட்டபோது அந்த பாடசாலையில் சுமார் 800 மாணவர்கள் இருந்ததாக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
189 நாடுகளுக்கான ஐ.நா வளர்ச்சிக் குறியீட்டிற்கு அமைய நைகர் உலகின் மிக ஏழ்மையான நாடாக உள்ளது.
No comments:
Post a Comment