விசாரணைக்கு வருகிறது ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

விசாரணைக்கு வருகிறது ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு

(எம்.எப்.எம்.பஸீர்)

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியை வலு இழக்கச் செய்யும் வகையில் எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்கக் கோரி 20 பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளியன்று பரிசீலனைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

குறித்த ரிட் மனு இன்று முதன் முறையாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போதே மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இம்மனுவை எதிர்வரும் வெள்ளியன்று பரிசீலனைக்கு எடுப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

முன்னதாக அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனி, எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி உள்ளிட்ட 20 கம்பனிகள், கடந்த 12 ஆம் திகதி, மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி, தேயிலை தொழிற்துறை சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

அண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயிக்க சம்பள நிர்ணய சபையூடாக அனுமதி பெறுவது குறித்து வரவு செலவு திட்டத்திலும் உள்வாங்கப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் தமது ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்மானமானது சட்டத்துக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்களான பெருந்தோட்ட நிறுவனங்கள், திடீரென தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, பெருந்தோட்ட தொழிற்துறையையே பிரச்சினைக்குள் தள்ளும் செயல் என மனுவூடாக கூறியுள்ளனர்.

மனுதாரர்களான, தாம் (பெருந்தோட்ட கம்பனிகள்) அரசுக்கு பாரிய தொகை வரியினை செலுத்தும் நிலையில், இந்த சம்பள அதிகரிப்பு ஊடாக கம்பனிகள் பாரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மனுவில் கூறியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் தமது மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் விடுக்குமாறும், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவை நிர்ணயம் செய்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வலு இழக்கச் செய்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையிலேயே, அறிவித்தல் பிறப்பிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை தீர்மானிக்க, மனுவின் விடயங்களை உறுதி செய்யும் முகமாக குறித்த ரிட் மனு எதிர்வரும் வெள்ளியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment