நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் 4 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க சார்பில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (22) தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசரினால் இந்த மனுவை கவனத்தில் கொள்வதற்காக நீதிபதி சிசிர டி ஆக்ருப், நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் நீதிபதி பிரதீப் பத்மன் சூரசேன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இவர்கள் இந்த மனுவை நிராகரித்துள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் கடும் வேலையுடன் கூடிய 4 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு திருத்தத்திற்கான மனு (Petition Revision) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment