சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மருத்துவ சான்றிதழ் பெற வருபவர்களிடம் அவர்கள் விரும்புமிடத்து உடல் உறுப்புத் தானத்திற்கான விருப்புக் கடிதம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க தேவையான மருத்துவ சான்றிதழ்களைப் பெற தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் கீழ் உள்ள மாகாண மாவட்ட மத்திய நிலையங்களுக்கு வருபவர்கள் தம்முடைய விரும்பின்பேரில் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பு அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் உடல் உறுப்பு மாற்றுக்கான தேசிய இயக்கம் என்பன இணைந்து இத்திட்டம் செயற்படுத்துகின்றன.
மருத்துவ சான்றிதழ் பெறும் நேரத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவோருக்கு விசேட அட்டை வழங்கப்படும். இது பற்றி சாரதி அனுமதிப்பத்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பனாபிட்டிய தெரிவித்தார்.
இதன்மூலம் விபத்து காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் முடிவு செய்யும் போது, அவரது உடலை உறுப்புக்களை வேறொரு நபருக்கு பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் அதற்கு உரியவர் உயிருடள் இருக்கும் போது சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதனை இலகுப்படுத்த இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று பிரதிப்பணிப்பாளர் ஜெனரல் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 5,000 பேர் உடல் உறுப்பு செயலிழப்பால் இறக்கின்றனர், மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய இதுவரை சுமார் 400 பேர் மட்டுமே முன்வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment