சமிந்த வாஸுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமைத்தவத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவர் இராஜினாமா செய்ய வழிவகுத்த விடயங்கள் இணக்கமாக தீர்க்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்திற்கு செல்லவிருந்த கடைசி நேரத்தில் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி குறித்த பதவியிலிருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தற்போது இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, சமிந்த வாஸ் முன்பு வகித்த வேகப்பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய சமிந்த வாஸ் தான் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை மீளப் பெற்றுள்ளார் எனவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக தொடர ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கி வரும் மதிப்புமிக்க சேவைகளையும், அவர் விளையாட்டிற்கு அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தாம் மதிப்பதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment