(செ.தேன்மொழி)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்ட பிரேரணை குறித்த வாக்ககெடுப்பின் போது இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தமைக்கான காரணம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மறுபுறம் இலங்கை மீதுள்ள இந்தியாவின் சினம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார்.
அரசாங்கத்தின் முறையற்ற வெளிநாட்டு கொள்கையின் காரணமாகவே ஆசிய நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்கப் பெறாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் எதிர்வரும் காலங்களில் இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேறற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளதுடன், 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வாக்களிப்பை தவிர்த்தவர்களையும், பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களாகவே காண்பிக்க முயற்சிக்கின்றார். நாட்டிலுள்ளவர்கள் முட்டால்கள் என்று எண்ணிக் கொண்டா அவர் இவ்வாறு கூறுகின்றார்.
இந்த பிரேரணை நிறைவேற்றத்தின் போது, அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலேயே நாம் தற்போது சிந்திக்க வேண்டும். அதற்கமைய, இதுவரை காலமும் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளன.
இவை உள்ளிட்ட ஆசிய நாடுகளிடமிருந்து, எமக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கான காரணம் என்ன ? எமது அயல் நாடான இந்தியா ஏன் எம்மீது சினம் கொண்டுள்ளது. அது தொடர்பிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், எமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதனூடாக அந்த நாடுகளிலுள்ள எமது சொத்துரிமைகளை தடுத்து வைக்க முடியும். அந்நாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை தடை செய்ய முடியும். பொருளாதார ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்த முடியும். அதனால் இது பாரியதொரு நெருக்கடியாகும்.
தென் கொரியாவை எடுத்துக் கொண்டால், எமது நாட்டைச் சேர்ந்த பெருந்தொகையானவர்கள் அங்கு தொழில் புரிந்து வருகின்றார்கள். இவ்வாறு தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டால், அங்கு பணிபுரிந்து வரும் எம்நாட்டு மக்களின் நிலைமை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை இந்த சிக்கலுக்கான காரணமென்ன என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கம் யுத்த கால சம்பவங்களையே பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக காண்பிக்க முயற்சிக்கின்றது. ஆனால் யுத்தகால சம்பவங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை. தற்போதைய நடைமுறை சார்ந்த விவகாரங்களே அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, சிவில் நிர்வாக பிரிவுகளில் இராணுவத்தை இணைத்துக் கொண்டுள்ளமை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இனவாத கருத்துக்கள், தனியார் உரிமைகளை மீறும் வகையிலான விசாரணை செயற்பாடுகள் தொடர்பிலே அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை தொடர்பிலும் சிக்கல் நிலை உள்ளது. பாரம்பாரியமாக இலங்கை கொண்டிருந்த வெளிநாட்டு கொள்கைகளை அரசாங்கம் முiறாயக கடைப்பிடிப்பதில்லை என்றார்.
No comments:
Post a Comment