(செ.தேன்மொழி)
கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டமிடலொன்று இல்லாத நிலையில், நாட்டில் மீண்டுமொரு வைரஸ் கொத்தணி ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க எத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்படப் போகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தொகுதி அமைப்பாளர் சட்டதரணி சுதத் ஜயசுந்தர கேள்வியெழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பெருமளவானோருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதற்கு கால தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசியை கால தாமதமின்றி வழங்குவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது ?
கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் அரசாங்கம் பின்தங்கியிருந்தாலும் தடுப்பூசிகளையேனும் கொண்டு வந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment