வாகனங்களின் டயர்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை - அபராதம் அறவிடவும் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

வாகனங்களின் டயர்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை - அபராதம் அறவிடவும் தீர்மானம்

தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தேய்ந்துபோன டயர்களுடன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு 3,500 ரூபாவும் தரமற்ற வாகனங்களை செலுத்துபவர்களுக்கு 25,000 ரூபா வரையும் அபராதமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வாகனங்களை அடையாளம் காண இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் எட்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் போது, தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு 3500 ரூபாய் அபராதமும், அத்தகைய வாகனங்களை செலுத்தி காயத்தை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அறிவிடப்படும் என்றும் அவர் குறிப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்த விபத்துகளுக்கு வாகன சாரதிகளின் கவனக்குறைபாடு, மதுபோதை மற்றும் வாகனங்களின் குறைபாடுகளும் பிரதான காரணமாக விளங்குகின்றன. இதனால் அவற்றை தடுக்கும் வகையில் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. இதன்போது தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்று எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வாகன சில்லுகள் தரமானதாக காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2009 ஆம் ஆண்டு கொண்டு வரவரப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் 145 ஆவது சரத்துக்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு வாகனமும் தரமான சில்லுகளை பயன்படுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு தரமற்ற சில்லுகளை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காகவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது தேய்ந்த சில்லுகளை பயன்படுத்திய வாகனங்களை அடையாளம் கண்டால், அவற்றுக்கு எதிராக 3500 ரூபாய் அபராதம் அறவிடப்படுவதுடன், அத்தகைய சில்லுகளை கொண்ட வாகனங்ககளை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி காயமடையச் செய்தால் வழமையான சட்ட விதிகளுடன், 25 ஆயிரம் ரூபாய் பணத் தொகை அபராதமாக அறவிடப்படும்.

No comments:

Post a Comment