தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்ததாவது, 'சனாதன பேராபத்திலிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய யுத்தகளமாக தேர்தல் இருக்கும். சனாதன சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாததால் வேறு வடிவங்களில் முயற்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சனாதான சக்திகள் தலையெடுக்க கூடாது என்பதற்காகவும், தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும், தனி சின்னத்தில் போட்டியிடும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.'' என்றார்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்யூர், வானூர், காட்டுமன்னார் கோயில், திட்டக்குடி, பொன்னேரி ஆகிய தனி தொகுதிகளையும், சோளிங்கநல்லூர், மயிலம், திருவள்ளூர், உளுந்தூர்பேட்டை, புவனகிரி ஆகிய ஐந்து பொது தொகுதிகளையும் கேட்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment