கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினரையும் நியமிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயலணிக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை அரசாங்கம் நியமித்துள்ளது.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மூத்த பேராசிரியர் அனுர மானதுங்க, காணி ஆணையர் நாயகம் கீர்த்தி கமகே, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஆர்.டி.நந்தன சேனதீர மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசின்சல செனவிரத்ன ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செயலணியில் அங்கம் வகித்த ஐந்து உறுப்பினர்களில் சிலர் ஓய்வு பெற்றமை மற்றும் இடமாற்றம் பெற்றதால் புதிய நியமனங்கள் நடைமுறைக்கு வருவதாக வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் செயலணி கடந்த 2020 ஜூன் 1 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. இதில் தமிழ் மற்றும் முஸ்லிம்களை இணைக்கும்படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனால் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பெயர்ப் பட்டியலொன்றினை சமர்ப்பித்திருந்தனர். அந்த பட்டியல் குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதற்கு விசனம் தெரிவித்துள்ளனர்.
காரைதீவு நிருபர்
No comments:
Post a Comment