எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட செயற்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் உள்ளிட்ட இலங்கை தேசிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) இவ்வாறு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவுள்ள எதிர்வரும் செயற்குழுவைத் தெரிவதற்கான தேர்தலுக்கு முன்னர், புதிய யாப்பொன்றை நிறுவுவதற்கும், அதன் நிர்வாக கட்டமைப்பு ஒழுங்கை மாற்றுவதற்கும், தற்போதுள்ள செயற்குழு தெரிவு தொடர்பான வாக்களிப்பு முறையை மாற்றியமைப்பதற்குமான உத்தரவை வழங்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், சிதத் வெத்திமுனி, மைக்கேல் திஸ்ஸரா, அனா புஞ்சீஹேவ, விஜய மலலசேகர, ரியன்சி விஜேதிலக, குஷில் குணசேகர, தினல் பிலிப்ஸ், நீதிபதி சலீம் மர்சூப், சோமசுந்தரம் ஸ்கந்தகுமார், திலான் விஜேசிங்க, பாலித கோஹண ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனு இன்றையதினம் (15) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர, மாயாதுன்னே கொரயா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, விடயம் தொடர்பில் பிரதிவாதிகள் மன்றுக்கு விளக்கமளிக்குமாறு, நீதிமன்றம் இவ்வழைப்பாணை உத்தரவை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment