(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில் - பொலிகண்டி பேரணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கையில் பல பொய்யான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை மெக்ஷவெல் பரணகம ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிராக தடைகளை பிறப்பிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கிடையாது. இம்முறை பலமான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு கடந்த அரசாங்கம் இணையனுசரனை வழங்கியமை அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக அமைந்தது.
நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு நல்லாட்சி அரசாங்கமும் ஆதரவு வழங்கியது. இதனால் அதுவரை காலமும் இலங்கைக்கு சார்பாக செயற்பட்ட நாடுகள் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் தற்போது இலங்கைக்கு ஆதரவாக செயற்பட தீர்மானித்துள்ளன. ஆகவே இம்முறை பலம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு சார்பாக இருக்கும்.
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கிடையாது. ஆகவே மனித உரிமை பேரவை முன்வைக்கும் விடயங்களை சுயாதீனமான முறையில் ஆராயும் உரிமை இலங்கைக்கு உண்டு. இவ்விடயத்தில் எத்தரப்பினருக்கும் அடிபணிய வேண்டிய தேவை கிடையாது என்றார்.
தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்குவதாக கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமைத்துவமாக கொண்ட தரப்பினர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி செல்கிறார்கள். வெறுக்கத்தக்க பேச்சுக்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் எதுவும் மாறப்போவதில்லை.
நாட்டில் எவ்வின மக்களுக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர பேரணி சென்று தீர்வை பெற முடியாது என்பதை தமிழ் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment