இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் விடயம் குறித்து வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூற முடியாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் எரிபொருள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அமித்ஷா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக 2 நாட்கள் கடந்த போதிலும் இது தொடர்பாக காணொளி எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த கூற்று தொடர்பில் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வ கருத்தை தெரிவித்தால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நாட்டு பற்றுள்ள மக்கள் வெளிநாட்டு அரசியல் கட்சிக்கு நாட்டில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment