நெடுந்தீவு, அனலைத்தீவு, நயினா தீவுகளை மின்சார உற்பத்திக்காக சீனாவிடம் கொடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டினால், இலங்கை - இந்திய நட்புறவில் விரிசல் ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜெனீவாவிற்கு நாங்கள் போகாவிட்டால் துரோகிகளோ என ஒரு கட்டத்தில் சுமந்திரனும் சிறிதரனும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நட்பு நாடுகள் சொல்லித்தான் ஜெனீவாவிற்கு போகவில்லை என இன்று கூறுகின்றனர்.
எமது நாட்டில் சுனாமி உள்ளிட்ட எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் உடனடியாக முன்வருவது இந்தியாதான். சுனாமி நேரத்தில் இந்தியாவிலும் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக இந்தியாதான் வந்தது. இவ்வாறான நிலையில் இந்தியாவை ஒரு சொல் கேட்டிருந்தால் இந்தியா வந்திருக்கும். ஆனால் எம்மவர்கள் கேட்கவில்லை.
இப்போது இந்தியாவிற்கு எதிரான வேலைகள் இடம்பெறுகின்றன. 3 தீவுகளை அரசு ஒரு நாட்டுக்கு கொடுக்க போகின்றது. அவ்வாறு நட்பு நாட்டுக்கு கொடுக்கும்போது, அந்த மூன்று தீவுகளும் அவர்களின் எதிரி நாட்டையே பார்த்துக் கொண்டுள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அதேபோல் இலங்கை அரசுக்கு தெரிய வேண்டும். இந்தியாவிற்கு நிச்சயம் அது தெரியும்.
கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். கச்சை தீவை இலங்கைக்கு கொடுத்தபோது இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனையும் மீறியே கொடுக்கப்பட்டது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment