(இராஜதுரை ஹஷான்)
தேசிய மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இலங்கையின் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தேசிய மரபுரிமைகள், கலை, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
கல்முதுர பகுதியில் தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தேசிய மரபுரிமைகள் காணப்படுகின்றன. மறைக்கப்பட்டுள்ள தேசிய மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முதன்மையாக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. நாடு தழுவிய ரீதியில் அகழ்வாராட்சி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் மாத்திரமே தற்போது நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தால் மாத்திரம் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க முடியாது. ஆகவே தேசிய மரபுரிமை சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீகிரியா குன்று, தலதா மாளிகை ஆகியவை உலக மரபுரிமையாக காணப்படுகிறதே தவிர தேசிய மரபுரிமையாக அடையாளப்படுத்தப்படவில்லை. இவற்றை தேசிய மரபுரிமையாக அடையாளப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு.
தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்த முடியாது.
தேசிய மரபுரிமைகளையும், நாட்டின் தனித்துவத்தையும் உலகத்திற்கு அடையாளப்படுத்துவோம். கடந்த அரசாங்கம் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த மாதம் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள தயாராக உள்ளோம். தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் விடயத்தில் எவ்வின மக்களின் மத மற்றும் இன உரிமைகளும் பாதிக்கப்படவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment