தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் முன் நிற்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், தோட்டத் தொழில் சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த யோசனையை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒருமித்த கருத்தை எடுக்க முடியவில்லை என்பதனால் சம்பள நிர்ணய சபையினால் தொழில் அமைச்சினூடாக தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டால் குறித்த முதலாளிமார்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வரவு செலவு திட்டத்தின்படி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பாக தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.
எனவே இது தொடர்பாக ஒரு முடிவை எடுக்க அமைச்சரவை, தொழிற் சங்கத்தின் ஊடாக சம்பள நிர்ணய சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் தொழில் அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் தோட்ட நிறுவனங்கள் ஊதியத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றார்.
சமஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்த
No comments:
Post a Comment