கம்பீரமான குரல் வளம் வாய்க்கப் பெற்ற பன்முக ஆளுமையான ரஷீத் எம் ஹபீல் வானொலி மற்றும் காணொளி நேயர்களினதும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களினதும் உள்ளம் கவர்ந்தவர் என அன்னாரின் மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்திருப்பதாவது, எனது மறைந்த தாயார் அவரது குரலை விரும்பிக் கேட்பது வழக்கமாக இருந்தது. குடும்ப நண்பர் ஒருவரின் இழப்பை ஜீரணிப்பது கஷ்டமானது. இலங்கையில் மட்டுமல்லாது, கடல் கடந்தும் தமிழ் பேசும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் ரஷீத் எம் ஹபீலின் நினைவுகள் கண்முன் நிழலாடுகின்றன.
புன்னகை பூத்த முகமும், ஒளிவு மறைவற்ற பேச்சும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையும் நண்பர் ஹபீலிடம் காணப்பட்ட சிறப்பம்சங்களில் சிலவாகும்.
நாங்கள் அரசியல், சமூக கலாசார ரீதியாக நெருக்கடிகளைச் சந்திக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களில் எங்களுக்கு உறுதுணையாக நின்று, உற்சாகமூட்டுவதில் அவருக்குத் தனியிடமிருந்தது.
கணீரென ஒலிக்கும் அவரது காந்தக் குரல் ஓய்ந்து விட்டது!
அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை அருள்வதோடு, துயருற்றிருக்கும் துணைவியாருக்கும், புதல்வர்களுக்கும், புதல்விக்கும், உறவினர்களுக்கும் மன ஆறுதலையும் அளிப்பானாக.
No comments:
Post a Comment