ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை மற்றும் தகவல்கள் முழுமையானவை அல்ல என குறிப்பிட்டுள்ள சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன இந்த தகவலை தெரிவித்தார்.
அதேவேளை பாரிய குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பில் கலந்துரையாட விசேட தினமொன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கையளிக்கப்பட்டது.இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர முன்னர் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment