அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்

(நா.தனுஜா)

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் அதனைச் செய்யவில்லை. எனவே அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், நாட்டில் இயங்கும் தேசிய அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் தாக்குதலுக்கான தூண்டுதல் காரணியாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என அதன் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும், இல்லாவிட்டால் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் கூறி கட்டுப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னாள் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை போராட்டங்களை முன்னெடுக்கின்றார். 

சில வருடங்களுக்கு முன்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாகி வருவது பற்றி நாம் எச்சரித்திருந்தோம். அப்போதே இது குறித்து கார்டினல் அழுத்தங்களை வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அப்போது கார்டினல் இன நல்லிணக்கம், ஒற்றுமை, மனித உரிமைகள் என்பன தொடர்பிலேயே பேசினார்.

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் விவகாரத்தில், அதற்கு அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லை என்று ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தது. தற்போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கை விவகாரத்தில் கார்டினலும் இயேசுவின் நீதிமன்றத்தில் அதற்கு மன்னிப்பில்லை என்றே கூறுகின்றார். 

எனவே இரு தரப்பினரும் ஒரே கருத்தையே கூறுகின்றார்கள். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகின்றது. இதனை நாட்டில் வாழும் பௌத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்தார். 

ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சுமார் 8 தடவைகள் முன்னிலையாகி, சாட்சியம் வழங்கிய பௌத்த தேரர் நானாகத்தான் இருப்பேன். எனவே முதலில் விசாரணை அறிக்கையின் பிரதியை எமக்குப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

நாட்டில் இடம்பெறும் கலாசார, பாரம்பரிய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முதலில் மதத் தலைவர்களே ஆராய்ந்து, அவதானம் செலுத்த வேண்டும். மாறாக மல்கம் கார்டினல் ரஞ்சித் போன்றவர்கள் சர்வதேச அமைப்புக்களை நாடுவது குறித்துப் பேசத்தேவையில்லை. 

கார்டினல் அவரது நிலை என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும். எனவே இவ்விடயத்தில் தேவையற்ற குழுப்பங்களை ஏற்படுத்துவதை மல்கம் கார்டினல் ரஞ்சித் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment