(எம்.மனோசித்ரா)
வடக்கு, கிழக்கில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்காவிட்டால் அதற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது. இதன் போது, 'வடக்கு கிழக்கில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் எவ்வித தனிமைப்படுத்தல் விதிகளும் பின்பற்றப்படவில்லை. இதற்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை யாது? ' என கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்காவிட்டால் அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனவே இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு என்பன எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதை எதிர்வரும் தினங்களில் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment