(எம்.மனோசித்ரா)
இராஜதந்திர ரீதியில் தொடர்புகளைப் பேணும் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் நட்பு நாடுகளுடன் அவதானம் செலுத்தப்படும். அவற்றில் தற்போது இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் குறித்த விடயங்களுக்கு முக்கியத்துமளிக்கப்படும். இலங்கை வரவுள்ள பாக்கிஸ்தான் பிரதமருடனான சந்திப்புக்களில் இவ்விடயம் குறித்து பேசப்படும் என்பது இரகசியமல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது. இதன் போது, ' பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். கனடா, ஜேர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதுவர்களுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மனித உரிமை பேரவை தொடர்பான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களா ? ' என்று கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தற்போது இராஜதந்திர தலைவர்களுடன் நாம் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வருகின்றோம். இதன்போது வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும். இவ்வாறு பேசப்படும் வெவ்வேறுபட்ட விடயங்களில் முக்கியத்துவமளிக்கப்படுவது மனித உரிமைகள் பேரவை தொடர்பானதாகும். இது இரகசியமானதல்ல.
பொருளாதாரம் தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும். அதேவேளை, 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடர்பிலும் நிச்சயம் பேசப்படும். இது தொடர்பிலும் ஏனைய பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment