(லியோ நிரோஷ தர்ஷன்)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 2019 இல் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எனவே இந்த புரிதல்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் அனைத்து தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் நல்லாட்சி ஆட்சியில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த திட்டத்தை தொடர்வதற்கு இந்தியா கூடிய ஆர்வம் காட்டிய போதிலும் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமை ஆரோக்கியமானதாக அமையவில்லை.
துறைமுக ஊழியர்கள் மாத்திரமல்லாது பிரதமர் உட்பட ஆளும் கட்சிக்குள்ளிருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றமை குறித்து வினாவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகார சபை முனையத்தின் அனைத்து நிர்வாகத்திற்கும் பொறுப்பாக இருக்குமென்றவாறான தீர்மானமொன்றை அரசாங்கம் எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை விரைவில் அமுல்படுத்துவதையே இந்தியா விரும்புகின்றது.
ஜப்பான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை டில்லி மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவ மட்ட கலந்துரையாடல்களின் போதும் பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு முனைய அபிவிருத்தியை வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் முன்னெடுக்க ஏற்கனவே அமைச்சரவையிலும் தீர்மானிக்கப்பபட்டுள்ளது.
எனவே இந்த புரிதல்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் அனைத்து தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment