ஐக்கிய தேசியக் கட்சி அழிவடைந்தமைக்கு சுமந்திரனே காரணம், சாணக்கியன் சிங்கள தமிழ் கலப்பிலிருந்து உருவான கரு - எமது தலைவர்கள் பிரதமரின் குசினிக்குள் சென்று உரையாடினேன், பின் கதவால் அமைச்சரை சந்தித்தேன் என கூறி வருகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

ஐக்கிய தேசியக் கட்சி அழிவடைந்தமைக்கு சுமந்திரனே காரணம், சாணக்கியன் சிங்கள தமிழ் கலப்பிலிருந்து உருவான கரு - எமது தலைவர்கள் பிரதமரின் குசினிக்குள் சென்று உரையாடினேன், பின் கதவால் அமைச்சரை சந்தித்தேன் என கூறி வருகின்றனர்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

சுமந்திரன் ஒரு புத்திசாலி. யூ.என்.பி சார்பானவர். அவரை டயஸ்போரா தேசியப்பட்டியல் கொடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர். அவரை உள்வாங்கியதனால்தான் யூ.என்.பி அழிந்தது என கல்முனை மறுமலர்ச்சி மன்றத் தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் - பொலிகண்டி பேரணி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை (15) இரவு கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்ற கோஷம் பேரணியில் சென்றவர்களால் எழுப்பப்பட்டதனை முகநூலில் பார்த்தேன்.

இவ்வாறுதான் 1956ஆம் ஆண்டு சிறீ எதிர்ப்புப் போராட்டம், சிங்கள மொழித்திணிப்பு சம்பந்தமாக ஊர்வலம் செல்கின்ற போது, ஏகாம்பரம் ஐயா, தந்தை செல்வநாயகமும் செல்கின்றார்.

இவ்விடயத்தை ஏகாம்பரம் ஐயா என்னிடம் கூறியும் உள்ளார். இவ்வாறு சிறீ எதிர்ப்புப் பேரணி செல்கின்ற போது ஏகாம்பரம் சிங்களம் ஒழிக என்று கோஷம் எழுப்புகின்றார்.

செல்வநாயகம் இதனைக் கேட்டவுடன் சத்தம் போடாதே அது நமது நோக்கமல்ல என கூறுகின்றார். நமது இலக்கினை நாம் நோக்கி நகர வேண்டுமெனச் சொல்கின்றார்.

இதேபோன்று சாணக்கியன் போன்றவர்கள் இதய சுத்தியுடன் பேரணியினை நடாத்திச் சென்றிருந்தால், அதாவது தந்தை செல்வாவின் முன்மாதிரியைக் கருத்திற்கொண்டு இவ்வாறு செய்யாதீர்கள் எனக் கூறியிருப்பாராயின், செல்வநாயகத்தைப் போன்ற ஒரு தலைவராக இவரை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவரும் இப்பேரணியில் இணைந்து சென்றதனால், உள் மனதில் என்னவுள்ளதென்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது வந்துள்ள சாணக்கியன் என்பவர் யார்? சிங்கள, தமிழ்க் கலப்புக் குடும்பத்திற்குள்ளிருந்து உருவான கரு அவர். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அரசியலுடன் பின்னிப்பிணைந்து காலத்தின் தேவையினால் டயஸ்போராவினால் கொண்டு வரப்பட்டவர்.

அதாவது, எவ்வாறு சுமந்திரனை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து உருவாக்கியது போன்றுதான்.

சுமந்திரனின் தந்தை வடக்கில் இராணுவத்தால் நூலகம் எரிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரதிநிதியாக இருக்கின்றார். பாதுகாப்பு நிமிர்த்தம் பிள்ளைகளுடன் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

அங்கு அக்குடும்பம் யூ.என்.பி சார்புள்ள குடும்பமாகச் செயற்படுகின்றது. கடந்த நல்லாட்சிக் காலத்தில் தமிழர்களின் கருத்துக்களை உட்புகுத்துவதற்காக ஒரு சிறந்த ஒருவர் தேவைப்பட்டார்.

அவர் ஒரு புத்திசாலி. யூ.என்.பி சார்பானவர். அவரை தேசியப்பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர். அவரை உள்வாங்கியதனால்தான் யூ.என்.பி அழிந்தது. 

அதேபோன்று டயஸ்போராவானது மஹிந்த குடும்பத்துடன் நெருக்கமான, சிங்களக் குடும்பங்களுடன் பரீட்சயமான மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய ஒரு திருமணமாகாத துடிப்புள்ள இளம் வாலிபனைக் கூட்டமைப்பிற்கூடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

நடந்து முடிந்த பொத்துவில் - பொலிகண்டிப் பேரணியில் முஸ்லீம்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கின்றார்கள் என்பதை உலகத்திற்குக் காட்டியுள்ளனர்.

முஸ்லீம்கள் சிலருக்கு விளக்கமில்லாமல் சாணக்கியனுக்குப் பின்னால் சென்றுள்ளனர். கோஷம் போட்டால் கோட்பாடுகளின்றி பின்னால் சென்று விடுவார்கள்.

பதுளையால் ஈழம் கேட்டவர்கள் கல்முனை பிரதேச செயலகத்திற்காகப் போராடுகின்றார்கள். இதன் முக்கிய நோக்கம் என்ன? இலங்கையில் முஸ்லீம்களுக்கு கல்முனைதான் கருவான இடம்.

எம்.எஸ் காரியப்பரிலிருந்து எம்.எச்.எம் அஸ்ரப் வரை கல்முனையிலிருந்துதான் தலைமைத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சிறீ எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற போது, பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஆட்சி இடம்பெற்றிருந்தது. அமைச்சரவையில் கூடி தமிழர்கள் சிறீ என்ற பதத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்முனை மண்ணைச் சேர்ந்த காரியப்பர் தமிழர்களே அரச உத்தியோகம் அதிகம் செய்வதாகவும், மாதம் நிறைவடைந்ததும் சம்பளத்தைப் பெற்று பக்கெற்றில் போட்டுகொண்டு சென்று விடுவார்கள் என்றார்.

இதனால் சிறீ என்ற பதத்தை பணத்தில் பதிக்குமாறும், அதனை அவர்கள் புறக்கணிக்கின்றார்களா? என்பதை அறிய யோசனை அப்போது கூறியுள்ளார். அப்போது பணத்தில் சிறீ என்ற பதத்தைப் பதித்ததும் அனைவரும் அதனைப் பக்கெற்றில் மடித்து வைத்துச் சென்று விட்டனர். போராட்டமும் நிறைவடைந்தது.

அவ்வாறு கல்முனை பிரசித்தமான ஒரு ஊர். கல்முனையின் பெறுமதி டயஸ்போராவிற்குத் தெரியும். அதனால், கல்முனையை வடக்கு, தெற்காகப் பிரித்து பெறுமதியில்லாமலாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

சதி ஒன்று இடம்பெறுகின்றது. ஆனால், எமது அரசியல் தலைவர்கள் பிரதமரின் குசினிக்குள் சென்று உரையாடி விட்டு வந்தேன். பின் கதவால் அமைச்சரைச் சந்தித்தேன் எனக்கூறி வருகின்றனர். எமக்கு பூச்சாண்டி காட்டித்திரிகின்றனர். 

இவ்விடயம் குசினிக்குள் கதைப்பதல்லை. கல்முனையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோடீஸ்வரன் தோல்வியடைந்து விட்டார். அதாவது, கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது.

கருணாவின் வரவு மற்றும் ஏனைய காரணிகளால் ஒரு பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளனர். அதற்குக் காரணம் கல்முனைப் பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கப்படவில்லை. இதனால் வாக்களிக்கப்படவில்லை.

தற்போது இழந்த கூட்டமைப்பின் செல்வாக்கினை பேரணி மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. எனினும், மறுபுறம் தமிழர்களின் பேரணியினால் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இதனை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறித்த மாதிரி சாணக்கியனும் அரசாங்கமும் சேர்ந்து இப்பேரணியை முன்னெடுத்துள்ளதென்பதே எனது கருத்தாகும் என்றார்.

No comments:

Post a Comment