வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு கோபுரத்தின் நிர்மாணப் பணியை தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில், உக்கிளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதியின்றியும் நகர சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளாமல் தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
சுமார் நூறு அடி உயரமாக அமைக்கப்படவுள்ள இக்கோபுரத்தைச் சூழவுள்ள பகுதியில் வசித்து வரும் 30 தொடக்கம் 35 வரையான குடும்பங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச் சங்கம், நகர சபை, பிரதேச செயலாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டும் இதன் நிர்மாணப் பணிகளைத் தடுப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இன்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இப்பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட அரச ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மக்கள் குடியிருப்புப் பகுதியில் இவ்வாறு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு கோபுரத்தினால் பல்வேறு அபாயமான அச்சுறுத்தல்கள் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி மக்கள் குடியிருப்பு அற்ற பகுதிகளில் இக்கோபுரத்தின் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து வவுனியா நகர சபைத் தலைவர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் நகர சபையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், இதன் பணிகளை மேற்கொள்வதற்கு தடை அறிவறுத்தல் நகர சபையினால் வழங்கப்பட்டுள்ளது. பணிமேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment