(ஆர்.யசி)
கொவிட்-19 தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழங்கப்படும் தடுப்பூசிகளில் ஒரு தடுப்பூசியை பத்திற்கும் அதிகமான நபர்களுக்கு ஏற்றுவது குறித்து ஆராய தீர்மானித்துள்ளதாகவும், இதுவரையிலும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றில் 35 ஆயிரம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் தெரிவிக்கின்றது.
நாட்டில் பரவிக் கொண்டுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்ற நிலையில், இப்போது வரையில் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறு பயன்படுத்தியுள்ள தடிப்பூசிகளில் அண்ணளவாக 35 ஆயிரம் தடுப்பூசிகள் வீணக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது பயன்படுத்தும் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியில் ஒரு மருந்துக் குப்பியில் பத்து நபர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்ற முடியும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் கொவிட் ஆய்வுக்குழுவில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றினை எடுக்கவும் சுகாதார பணியகம் தெரிவிக்கின்றது.
எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி ஒரு தடுப்பூசியில் பத்திற்கும் அதிகமான நபர்களுகளுக்கு ஏற்றுவதற்கு முயற்சிப்பதாகவும், சிறிதளவேனும் மருந்துகள் வீனக்கப்படக் கூடாது, எஞ்சும் சிறிய அளவிலான மருந்தில் இன்னும் ஒரு நபர் பயன்பெறக் கூடியதாக இருக்க வேண்டும் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது நாட்டில் காணப்படும் திரிபுபட்ட கொவிட்-19 வைரஸ் பரவலை அடுத்து நாடு முடக்கப்படும் என்ற கருத்துக்கள் பகிரப்படுகின்ற நிலையில் அது குறித்து சுகாதார பணியகத்தின் தீர்மானம் என்னவென பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் வினவியபோதே அவர் கூறியதானது,
நாட்டினை முடக்குவது குறித்து நினைத்தால் போல் தீர்மானம் எடுக்க முடியாது, எனினும் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்தும், புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் பரவுகின்றமை குறித்தும் மேலும் ஆய்வுகளை நடத்த வேண்டிய நிலைமையே உள்ளது. இந்த விடயத்தில் சில குழப்பகரமான நிலைமைகளும் காணப்படுகின்றது. நாளையதினம் இவற்றை ஆராய சுகாதார தரப்பினர் கொவிட் செயலணி கூட்டம் கூடவுள்ளது.
அதேபோல் இப்போது வரையில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா வைரஸ் தடுப்பூசிகளை விடவும் மேலும் மூன்று தடுப்பூசிகளை விரைவில் இலங்கையில் பயன்படுத்தும் அனுமதியை ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் பெற்றுக் கொள்ளவுள்ளோம்.
அதேபோல் அடுத்த கட்டத்தில் கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை தனியார் துறை வைத்தியர்களுக்கும் ஏற்றுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
எனவே அடுத்த கட்டத்தில் கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை தெரிவுசெய்யப்பட்ட பிரிவினருக்கு வழங்குவோம். அதில் தனியார் துறை வைத்தியர்களும் உள்ளடங்குவர். ஊடகவியலாளர்களுக்கும் இவற்றை பெற்றுக் கொடுப்பது குறித்து சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment