அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - இரு கட்சிகளிடையே உடன்பாடு கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - இரு கட்சிகளிடையே உடன்பாடு கைச்சாத்து

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் கோ. க. மணி, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகளான கே பி முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு அதில் கைச்சாத்திட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது, '' 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

பேரவைத் தேர்தலில் பா.ம.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க - அ.தி.மு.க இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க வுக்கு 23 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கோ.க. மணி, அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளோம். 

தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே தற்போது பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைவது என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.' என்றார்.

இதனிடையே தமிழகத்தில் 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு, 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்து போட்டியிடுகிறது என்பதும், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தற்போதைய முதல்வரான எடப்பாடி கே. பழனிச்சாமி போட்டியிட்டு வென்ற எடப்பாடி தொகுதியில், பா.ம.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், தி.மு.க வேட்பாளரை விட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment