அடக்கம் செய்தல், 20 ஆவது திருத்தம் முற்றிலும் வேறுபட்டவை இவை இரண்டையும் இணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கக்கூடாது - எஸ்.எம். மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

அடக்கம் செய்தல், 20 ஆவது திருத்தம் முற்றிலும் வேறுபட்டவை இவை இரண்டையும் இணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கக்கூடாது - எஸ்.எம். மரிக்கார்

(எம்.மனோசித்ரா)

20 ஆவது அரசியலமைப்பு என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினருக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மக்களிடமோ ஐக்கிய மக்கள் சக்தியிடமோ மன்னிப்பே கிடைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய பிரதமரின் அறிவிப்பை செயற்படுத்த முடியும். அதன் மூலம் முஸ்லிம் மக்கள் மாத்திரமின்றி ஏனைய மதத்தை பின்பற்றும் மக்களும் பயனடைய முடியும்.

பிரதமர் பாராளுமன்றத்தில் கூறிய விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொருவர் கூறிக் கொண்டிருக்கும் கருத்துக்கள் இங்கு முக்கியமானவையல்ல. வைத்திய நிபுணர்கள் வழங்கிய பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்துமாறு நாம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறியமையினாலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியுள்ளனர். கொரோனா சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பன முற்றிலும் வேறுபட்ட விடயங்களாகும். எனவே இவை இரண்டையும் இணைக்க முயற்சிக்க வேண்டாம் என்று முஸ்லிம் காங்ரசுக்கு கூற விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு திருத்தம் என்று கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டிய விடயமாகும். நாட்டை சர்வாதிகார போக்கிற்கு கொண்டு செல்வதே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகும். அதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியில் அதனை எதிர்த்தது. எனவே தற்போது வெவ்வேறு கருத்துக்களை கூறிக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதால் பிரயோசனமில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி தற்போதும் எதிர்காலத்திலும் சர்வாதிகார தலைவரை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தாயிற்று. அதேவேளை 19 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஜனநாயகத்தையும் அழித்து விட்டாயிற்று. எனவே இவர்களுக்கு மீண்டும் மன்னிப்பு கிடையாது.

ஐக்கிய மக்கள் சக்தியிடமும் இவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கிடையாது. எனவே இவ்வாறு பொய் கூறி அனைத்தையும் குழப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கின்றோம். முஸ்லிம் மக்களையும் நாட்டை உண்மையில் நேசிக்கின்றவர்கள் அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment