(எம்.எப்.எம்.பஸீர்)
கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.
கண்டி கட்டுகஸ்தொட்ட பாலத்திற்கு அருகாமையில் டிஜிட்டல் பதாகையொன்றை நிறுவுவதற்காக கண்டி மாநகர சபையினால் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்கும் பொருட்டு மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த திட்டத்தை முன்னெடுப்பவரிடம் இலஞ்சம் கோரியுள்ளனர். இது தொடர்பில் குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையிலேயே இந்த விஷேட சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய சுட்டிக்காட்டினார்.
அதன்படி, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இலஞ்ச பணத்தை பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அதன் பின்னர் அது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தெரிவித்தது.
No comments:
Post a Comment