நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது! - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது.

கொட்டகலை - டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய செல்லையா சிதம்பரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் டயகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 01.01.2021 அன்று அழைத்துச் செல்லப்பட்டப்போது, அவரை அங்கு ஏற்றுக் கொள்ள முடியாது என வைத்தியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவர் நுவரெலியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், சுய தனிமைப்படுத்தலில் இருந்த இவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதன் காரணமாகவே இவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த 01.01.2021 அன்று பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 03.01.2021 அன்று மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுதே இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் அவர் நுவரெலியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இறந்தவரின் இறுதிக் கிரியைகள் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment