(செ.தேன்மொழி)
மட்டக்களப்பு - காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகளை சட்ட விரோதமாக தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டவர்கள் தொடர்பில் விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பகுதியில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றுள் 7 கிராம சேவகர் பிரிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறு சட்டவிரோதமாக இந்த பகுதிகளை விடுவக்க உத்தரவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் அந்த பகுதிகளை மீள திறக்குமாறு அறிவிக்கப்படும் வரை உடனடியாக அவற்றை மீளவும் மூடுவதற்கு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பகுதிகள் சட்டவிரோதமான முறையில் திறக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அங்கு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உதவி பொலிஸ்மா அதிபர், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே, மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் அது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று மாலை முதல் இந்த பகுதிகள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment